‘சியாட்டிக்கா’ (Sciatica)... கேட்பதற்கு வேடிக்கையான, புதிதான ஒரு வார்த்தையாகத் தோன்றலாம். ஆனால், இந்தப் பிரச்னை ஏற்படுத்தும் வலி வார்த்தையில் அடக்க முடியாதது. ‘கால் திடீர்னு மரத்துப்போகுது... தொடைப்பகுதியில இருந்து சுளீர்னு ஏதோ ஒண்ணு இழுக்குற மாதிரி வலி, பின்கால் வரைக்கும் நீளுது’ என்பார்கள் பாதிக்கப்பட்டவர்கள். 40 வயதைத் தாண்டிய பெண்கள்தான் இந்த சியாட்டிக்காவால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
“சியாட்டிக்கா என்பது, முதுகில் ஆரம்பித்து, காலின் பின்பகுதியில் குதிகால் வரை நீளும் ஒரு நரம்பின் பெயர். உடலில் உள்ள நரம்புகளிலேயே, மிக நீளமான ஒற்றை நரம்பு சியாட்டிக்காதான். இந்த நரம்பு பாதிக்கப்பட்டால், கால் வலுவிழப்பது, சோர்வு, உணர்வின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படும். அண்மைக்காலமாக 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்தப் பிரச்னைக்கு ஆளாவது அதிகமாகியிருக்கிறது.. கால் மரத்துப்போவது இதன் மிக முக்கியமான அறிகுறி. இந்தப் பிரச்னை இருப்பதை முதல் நிலையிலேயே கண்டறிந்துவிட்டால், எளிதாக குணப்படுத்திவிடலாம்
சியாட்டிக்கா வருவதற்கான காரணங்கள்...
* முதுகெலும்பின் அசையும் மூட்டுகளில் வீக்கம் உண்டாவது.
* எலும்புகளுக்கு இடையே இருக்கும் ஜவ்வு விலகி பாதிப்படைவது.
* கருவுற்றிருக்கும் பெண்களின் கர்ப்பப்பை பலவீனமாக இருப்பது.
* வயது முதிர்வு காரணமாக ஏற்படும் டிஸ்க் ஸ்பாண்டிலோஸிஸ் (Disc spondylosis).
* எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பவர்கள்.
* தசைகளில் பாதிப்பு ஏற்பட்டிருப்பவர்கள்
இந்தப் பிரச்னைகளில் ஏதோ ஒன்று ஒருவருக்கு ஏற்படும்போது தண்டுவடத்தை ஊடுறுவும் நரம்புகள் அழுத்தம் பெற்று சுருங்கத் தொடங்கும். ரத்த ஓட்டம் பாதிப்படையும். இதனால், நரம்பு வலுவிழந்து, தன் வேலையைச் செய்ய முடியாமல் திணறும். நாளாக ஆக, இந்த நரம்பில் வலி எடுக்கத் தொடங்கும்.